மாவட்டம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 25 ஆயிரம் பேர் விண்ணப்பம்

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மொத்தம் 25 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

Update: 2020-01-24 22:41 GMT
திண்டுக்கல்,

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் செய்யும் பணி நடக்கிறது. இதற்காக கடந்த டிசம்பர் மாதம் 23-ந்தேதி முதல், இந்த மாதம் 22-ந்தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி திருத்தம், தொகுதி இடமாற்றம் தொடர்பாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மேலும் வாக்குச்சாவடிகளில் 4 நாட்கள் சிறப்பு முகாமும் நடத்தப்பட்டது.

இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 2 ஆயிரத்து 94 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவை அனைத்திலும் 4 நாட்கள் சிறப்பு முகாம் நடந்தது. மேலும் தாலுகா அலுவலகங்கள், மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இதன்மூலம் மாவட்டம் முழுவதும் மொத்தம் 25 ஆயிரத்து 17 பேர், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்து உள்ளனர். இதில் அதிகபட்சமாக பழனி சட்டமன்ற தொகுதியில் 5 ஆயிரத்து 229 பேரும், நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 4 ஆயிரத்து 453 பேரும், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் 4 ஆயிரத்து 233 பேரும் விண்ணப்பித்தனர்.

இதுதவிர நத்தம் சட்டமன்ற தொகுதியில் 3 ஆயிரத்து 381 பேரும், வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் 2 ஆயிரத்து 801 பேரும், ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் 2 ஆயிரத்து 512 பேரும், திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் 2 ஆயிரத்து 408 பேரும் விண்ணப்பித்து உள்ளனர்.

மேலும் 7 தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியலில் பெயரை நீக்கம் செய்வதற்கு 365 பேரும், முகவரி திருத்தம் செய்வதற்கு 1,889 பேரும், தொகுதி இடமாற்றம் செய்வதற்கு 298 பேரும் விண்ணப்பித்து இருக்கின்றனர். இந்த விண்ணப்பங்கள் அனைத்தும், கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அதையடுத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் கள விசாரணை செய்யப்பட்டு, தகுதியான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்