திருவண்ணாமலையில் நடந்த குடியரசு தின விழாவில் ரூ.6¼ கோடியில் நலத்திட்ட உதவிகள் - தேசிய கொடியை ஏற்றி வைத்து கலெக்டர் வழங்கினார்

திருவண்ணாமலையில் நடந்த குடியரசு தின விழாவில் ரூ.6¼ கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கந்தசாமி தேசிய கொடி ஏற்றி வைத்து வழங்கினார்.

Update: 2020-01-26 22:30 GMT
திருவண்ணாமலை,

இந்தியாவின் 71-வது குடியரசு தின விழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கலந்துகொண்டு காலை 8.02 மணி அளவில் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தி, புறாக்கள் மற்றும் வண்ண பலூன்களை பறக்கவிட்டார்.

பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. இதனை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி ஆகியோர் ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து போலீஸ் துறையில் சிறப்பாக பணியாற்றிய 48 பேருக்கு முதல் - அமைச்சரின் பதக்கத்தை கலெக்டர் அணிவித்து பாராட்டினார்.

இதையடுத்து சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுகளை கவுரவிக்கும் வகையில் விழா பந்தலில் அவர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு கலெக்டர் சென்று அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

தொடர்ந்து பல்வேறு பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கலாசாரம், பண்பாடு, மனிதநேயம் வளர்ப்போம், தேசிய ஒருமைப்பாடு போன்றவற்றை விளக்கி கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

மேலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளின் நடன நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது. கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு கலெக்டர் சிறப்பு பரிசு வழங்கினார்.

இதனையடுத்து போலீசாரின் மோப்ப நாய்களின் திறமைகள் காட்சி படுத்தப்பட்டது. அப்போது 5 பேர் நிற்க வைத்து அவர்களில் ஒருவரிடம் வெடிகுண்டு கொடுக்கப்பட்டு மோப்ப நாய் மூலம் சோதனை செய்யப்பட்டு யாரிடம் வெடிகுண்டு உள்ளது என்று கண்டறியப்பட்டது. மேலும் திருட்டு மற்றும் கொலை சம்பவங்களில் மோப்ப நாயின் பணிக்குறித்தும் விளக்கி காண்பிக்கப்பட்டது. நெருப்பு வளையத்தில் மோப்ப நாய்கள் தாண்ட வைக்கப்பட்டது.

பின்னர் வருவாய்த்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, ஊரக வளர்ச்சி முகமை திட்டம், கூட்டுறவுத்துறை, வேளாண்மைத்துறை என பல்வேறு துறைகள் சார்பில் மொத்தம் 1,563 பயனாளிகளுக்கு ரூ.6 கோடியே 36 லட்சத்து 24 ஆயிரத்து 599 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கந்தசாமி வழங்கினார்.

பின்னர் வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்பு மீட்பு பணித்துறை, ஊரக வளர்ச்சி துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூகநலத் துறை, தனித்திறமையாளர்கள் உள்பட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கலெக்டர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, மாவட்ட முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் வனிதா, அசோக்குமார் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்