நீலாங்கரை அருகே, கடலில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

நீலாங்கரை அருகே ராட்சத அலையில் சிக்கி கடலில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2020-01-26 22:45 GMT
ஆலந்தூர், 

சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரைச் சேர்ந்தவர்கள் பாலாஜி (வயது 20), மகேஷ்(18). இவர்கள் இருவரும் சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தனர். நேற்று இவர்கள், தங்கள் நண்பர்கள் 4 பேருடன் நீலாங்கரை அருகே அக்கரை கடற்கரைக்கு சென்றனர்.

அங்கு நண்பர்கள் அனைவரும் கடலில் குளித்தனர். அப்போது கடலில் எழுந்த ராட்சத அலையில் பாலாஜி, மகேஷ் இருவரும் சிக்கினர். சகநண்பர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.

இருவரையும் ராட்சத அலை கடலுக்குள் இழுத்துச்சென்றுவிட்டது. இதில் பாலாஜி, மகேஷ் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இவர்களது உடல்கள் ஈஞ்சம்பாக்கம் கடற்கரையில் கரை ஒதுங்கியது. 

இதுபற்றி நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்