நெல்லையில் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி எல்.ஐ.சி. ஏஜெண்டு பலி

நெல்லையில் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி எல்.ஐ.சி. ஏஜெண்டு பரிதாபமாக இறந்தார்.

Update: 2020-01-27 22:45 GMT
நெல்லை, 

நெல்லை கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றின் கீழ்பகுதியான மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே நேற்று மதியம் 3 மணி அளவில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உடல் மிதந்தது. அங்கு குளித்து கொண்டிருந்தவர்கள் பார்த்து நெல்லை சந்திப்பு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது இறந்து கிடந்தவரின் சட்டைப்பையில் ஆதார் அட்டை இருந்தது.

அதனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தூத்துக்குடி அழகேசபுரம் 2-வது தெருவை சேர்ந்த மாரிமுத்து (வயது 50) என்பதும், அவர் எல்.ஐ.சி. ஏஜெண்டாக பணியாற்றி வந்ததும், ஆற்றில் மூழ்கி இறந்ததும் தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாரிமுத்து நெல்லைக்கு எதற்காக வந்தார்? பணி நிமிர்த்தமாக வந்தாரா? வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்