உத்திரமேரூர் அருகே பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி குழந்தை பலி

உத்திரமேரூர் அருகே பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி குழந்தை பரிதாபமாக இறந்தது.

Update: 2020-01-28 22:15 GMT
உத்திரமேரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த பெருநகர் நியூ காலனியை சேர்ந்தவர் அருணகிரி. இவரது மகன் புனிதன் (வயது 4). மகள் பொன்மதி (2). புனிதன் தனியார் பள்ளியில் யு.கே.ஜி. படித்து வருகிறான்.

நேற்று முன்தினம் மாலை புனிதன் பள்ளி முடிந்து வேன் மூலம் வீட்டுக்கு வந்தான். புனிதனை வீட்டின் முன்பாக இறக்கி விட்டு விட்டு டிரைவர் வேனை இயக்கி உள்ளார். இதில் அங்கு விளையாடி கொண்டிருந்த பொன்மதி வேன் சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்தாள். உடனடியாக அங்கு இருந்தவர்கள் குழந்தை பொன்மதியை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பொன்மதி பரிதாபமாக இறந்தது.

இது குறித்து பெருநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த வேன் டிரைவர் சிவசங்கரை (28) கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்