திசையன்விளை அருகே, பள்ளிக்கூட வேன் மோதி 2 வயது குழந்தை பலி - டிரைவர் கைது

திசையன்விளை அருகே தனியார் பள்ளிக்கூட வேன் மோதி, 2 வயது குழந்தை பரிதாபமாக இறந்தது. இதுதொடர்பாக வேன் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-01-28 22:15 GMT
திசையன்விளை, 

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள பெட்டைக்குளம் யாதவர் தெருவை சேர்ந்தவர் சுரேஷ். அவருடைய மகன் மகேஷ் (வயது 2). நேற்று காலை மகேஷ் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது அந்த வழியாக பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த தனியார் பள்ளிக்கூட வேன், குழந்தையின் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதனை பார்த்து உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். படுகாயம் அடைந்த குழந்தையை உடனடியாக உறவினர்கள் மீட்டு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

ஆனால், ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே குழந்தை மகேஷ் பரிதாபமாக உயிரிழந்தான். அவனது உடலை பார்த்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து குழந்தையின் தாயார் இசக்கியம்மாள், திசையன்விளை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜூடி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து இட்டமொழியை சேர்ந்த வேன் டிரைவர் செல்வின் (20) என்பவரை கைது செய்தனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்