கண்ணமங்கலத்தில் ரூ.4¼ கோடியில் துணை மின் நிலையம் - காணொலி காட்சி மூலம் முதல் - அமைச்சர் திறந்து வைத்தார்

கண்ணமங்கலத்தில் ரூ.4¼ கோடியில் துணை மின் நிலையத்தை நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

Update: 2020-01-29 22:30 GMT
கண்ணமங்கலம், 

கண்ணமங்கலத்தில் ரூ.4 கோடியே 39 லட்சத்தில் ஒருங்கிணைந்த மின்மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அழகுசேனை சூளைமேடு பகுதியில் புதிதாக துணை மின் நிலையம் அமைக்கப்பட்டது.

இந்த துணை மின் நிலையத்தை நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

அதைத் தொடர்ந்து துணை மின் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மேற்கு ஆரணி ஒன்றியக்குழு தலைவர் பத்மாவதி தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு துணைத்தலைவர் வேலாயுதம், அரசு வழக்கறிஞர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கவுன்சிலர் பூங்கொடிதிருமால் குத்து விளக்கேற்றி வைத்தார். தொடர்ந்து திருவண்ணாமலை மேற்பார்வை பொறியாளர் நாகராஜ் மின் வினியோகம் செய்யும் பணியை தொடங்கி வைத்தார்.

இதில் ஆரணி செயற் பொறியாளர் சரசுவதி, உதவி செயற் பொறியாளர்கள் ஜெயபாரதி, திருமலை, ஜெயலட்சுமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல் செய்யாறை அடுத்த பெரும்பள்ளம் கிராமத்தில் ரூ.4 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் துணை மின் நிலையம் அமைக்கப்பட்டது. இதனை கிராம மக்களின் பயன்பாட்டிற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் இருந்தப்படி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.அதைத் தொடர்ந்து துணை மின்நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தூசி கே.மோகன் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. வே.குணசீலன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை செய்யாறு கோட்ட செயற் பொறியாளர் எம்.ரவிராஜன் மேற்பார்வையில் மின்பணியாளர்கள் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்