சென்னை மாநகராட்சி ஊழியரை கொன்ற தொழிலாளி கைது

சென்னை மாநகராட்சி ஊழியரை கொலை செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-01-30 22:30 GMT
வண்டலூர், 

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் வள்ளியம்மாள் தெருவை சேர்ந்தவர் பூபதி (வயது 40). சென்னை மாநகராட்சியில் குடிநீர் வாரிய ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 25-ந் தேதி இரவு நண்பர்கள் 2 பேருடன் மது அருந்துவதற்காக ஆட்டோவில் கிளாம்பாக்கம் டாஸ்மாக் கடைக்கு சென்று கொண்டிருந்தார். செல்லும் வழியில் ஆட்டோ மீது ஒரு மோட்டார் சைக்கிள் லேசாக உரசியதால், அதில் வந்த வாலிபருக்கும், ஆட்டோவில் இருந்தவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது.

பின்பு கிளாம்பாக்கம் டாஸ்மாக் கடை அருகே மேம்பாலத்தின் கீழ் இருந்த பூபதியை ஏற்கனவே தகராறு செய்த வாலிபர் கத்தியால் கழுத்தை அறுத்துக்கொலை செய்தார். இது தொடர்பாக போலீசார் தப்பி ஓடிய வாலிபரை வலைவீசி தேடி வந்தனர். 

இந்த நிலையில் நேற்று கிளாம்பாக்கம் மேம்பால பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் ஊரப்பாக்கம் ஆதனூர் பகுதியை சேர்ந்த பிரிண்டிங் தொழிலாளியான சரவணபாபு (39) என்பதும், மாநகராட்சி ஊழியர் பூபதியை அவர்தான் கொலை செய்தது என்பதும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்

மேலும் செய்திகள்