ரூ.1 கோடி மதிப்பீட்டில் பழைய அமராவதி ஆற்று பாலத்தில் பூங்கா அமைக்கும் பணி தீவிரம் அமைச்சர் ஆய்வு

ரூ.1 கோடி மதிப்பீட்டில் கரூரில் பழைய அமராவதி ஆற்று பாலத்தில் பூங்கா அமைக்கும் பணியை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2020-02-01 23:00 GMT
கரூர்,

கரூர் திருமாநிலையூரில் அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பழைய பாலத்தை, கரூர் வைசியா வங்கியின் பங்களிப்புடன் ரூ.1 கோடி மதிப்பீட்டில் பூங்காவுடன் கூடிய நடைபாதையாக சீரமைக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளை நேற்று மாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நடைபாதை முழுவதும் பொதுமக்களுக்கு இனிய இசை கேட்கும் வகையில் ஒலிப்பான்கள் அமைக்கவும், பசுமையான சூழலில் மக்கள் இருக்கும் வகையில் செடிகள் வைத்து பராமரிக்கவும் கரூர்வைசியா வங்கி பொறியாளருக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது, நகராட்சி நிர்வாக மண்டல ஆணையர் அசோக்குமார், திருச்சி மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், மாவட்ட ஊராட்சித்தலைவர் எம்.எஸ்.கண்ணதாசன், கரூர் மொத்த கூட்டுறவு விற்பனை பண்டகசாலை தலைவர் வை.நெடுஞ்செழியன், வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் வி.சி.கே.ஜெயராஜ்(கரூர்), தொலைபேசி ஆலோசனைக்குழு உறுப்பினர் சிவசாமி, கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதி கமலகண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் பேட்டி

இதையடுத்து பூங்கா பணிகள் குறித்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறுகையில்:- கரூர் நகரத்தில் பொதுமக்களின் பொழுதுபோக்கிற்காகவும், நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையிலும் பழைய அமராவதிஆற்றுப்பாலத்தை சீரமைத்து பூங்கா அமைக்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. இந்தப்பாலம் முழுவதும் பேவர் பிளாக் கற்கள் பதித்து, இரண்டு பகுதிகளிலும் பாதுகாப்புக்காக உயரிய கம்பிகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், பாலத்தின் நடுவில் பொதுமக்கள் அமரும் வகையில் சாய்வு நாற்காலிகளும், மின்விளக்குகளும் பொருத்தப்படவுள்ளன. அதுமட்டுமல்லாது, பூங்காவின் நுழைவு வாயில் அருகே பொதுமக்களும், சிறுவர்களும் மகிழும் வகையில் பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்படவுள்ளது. 24 மணிநேரமும் காவலர் நியமிக்கப்படவுள்ளார். பொதுமக்களுக்காக கழிப்பறைவசதிகளும் மேற்கொள்ளப்படவுள்ளது. கரூர் வைசியா வங்கியின் மேற்பார்வையில் இந்தப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்