வேலையின்மைக்கு எதிராக 4 லட்சம் இளைஞர்களிடம் கையெழுத்து இயக்கம்

வேலையின்மைக்கு எதிராக 4 லட்சம் இளைஞர்களிடம் கையெழுத்து இயக்கம் பெறுவது என அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-02-09 23:00 GMT
திருவாரூர்,

திருவாரூரில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்டக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பெருமன்றத்தின் மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் துரை அருள்ராஜன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் நல்லசுகம், நிர்வாகிகள் பாப்பையன், செந்தில்குமார், கணே‌‌ஷ், சிவரஞ்சித், அறிவழகன், சார்லஸ் விக்டர், ராமகிரு‌‌ஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காலிப்பணியிடங்கள்

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- தமிழகம் முழுவதும் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 96 லட்சம் இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருக்கின்றனர். தமிழகத்தில் கல்வித்துறை, வருவாய்த்துறை, வேளாண்துறை, ஊரக வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் பல லட்சக்கணக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் விரக்தியில் படித்த இளைஞர்கள் வன்முறையிலும் ஈடுபட்டு வருவதாக அரசு தரப்பிலும் சொல்லப் படுகிறது.

4 லட்சம் கையெழுத்து

இதனை போக்கிடவும், தடுத்திடவும் அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. எனவே அனைத்து துறைகளிலும் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். புதிய பணியிடங்களை உருவாக்கி அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 21-ந்தேதி முதல் மார்ச் 5-ந்தேதி வரை வேலையின்மைக்கு எதிராக 4 லட்சம் இளைஞர்களிடம் கையெழுத்து பெறுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்