குடியுரிமை திருத்த சட்டத்தை படிக்காமல் ரஜினிகாந்த் பேசுகிறார் நாஞ்சில் சம்பத் குற்றச்சாட்டு

குடியுரிமை திருத்த சட்டத்தை படிக்காமல் ரஜினிகாந்த் ேபசுகிறார் என்று நாஞ்சில் சம்பத் குற்றம் சாட்டினார்.

Update: 2020-02-10 23:15 GMT
பொறையாறு,

நாகை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே திருச்சம்பள்ளியில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு இந்திய தேசிய முஸ்லிம் லீக் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் ‌ஷாஜஹான் தலைமை தாங்கினார். முஸ்லிம் ஜமாத் தலைவர் தஸ்தகீர், நிர்வாகி முகமது சமீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார ஜமாத்துல் உலமாக்கள் சபை தலைவர் ஷேக்அலாவுதீன் வரவேற்றார்.

இதில் நாஞ்சில் சம்பத், வக்கீல் தமிழன் பிரசன்னா, நாகை மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் நிவேதா முருகன், மாவட்ட துணைத்தலைவர் ஞானவேலன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசியதாவது:-

முஸ்லிம்களை வெளியேற்ற...

இந்தியாவில் 400 ஆண்டுகளுக்கு மேலாக முகலாயர்கள் ஆட்சி செய்துள்ளனர். அவர்களது ஆட்சியில் பொதுமக்களுக்கு நல்ல பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் எப்படி ஆட்சி செய்ய வேண்டும் என்று அடித்தளம் அமைத்தவர்கள் முகலாயர்கள். நமக்கு உறவினர்களாக பழகி வரும் முஸ்லிம்களை இந்தியாவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதற்கு துணையாக அ.தி.மு.க. மற்றும் பா.ம.க. எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் மேல்சபையில் வாக்களித்ததால் தான் இந்த மசோதா வெற்றி பெற்றது. இது கண்டிக்கத்தக்கதாகும்.

படிக்காமல் பேசுகிறார்

நடிகர் ரஜினிகாந்த் குடியுரிமை திருத்த சட்டத்தை படிக்காமலும், இந்திய வரலாற்றை தெரிந்து கொள்ளாமலும் பேசி கொண்டிருக்கிறார். தமிழகத்தில் அ.தி.மு.க. அரசுக்கு தக்க பாடம் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. நிஜாமுதீன், இரணியன் மற்றும் அனைத்து ஜமாத் கூட்டமைப்பினர் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் திருச்சம்பள்ளி ஜமாத் நிர்வாகி பீர்முகமது நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்