திருவரங்குளம் அருகே கார் கவிழ்ந்து வாலிபர் பலி நண்பர் படுகாயம்

திருவரங்குளம் அருகே கார் கவிழ்ந்ததில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். அவருடைய நண்பர் படுகாயமடைந்தார்.

Update: 2020-02-10 22:45 GMT
திருவரங்குளம்,

திருவரங்குளம் அருகே வம்பன் வீரடிபட்டியை சேர்ந்தவர் சிவானந்தன். இவருடைய மகன் அழகியசோழன் (வயது 28). இவர், தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த சின்னையா மகன் சுதந்திரனுடன்(28) நேற்று முன்தினம் காரில் புதுக்கோட்டைக்கு வந்தார்.

பின்னர் நள்ளிரவில் அவர்கள், வம்பன் வீரடிபட்டிக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். காரை அழகியசோழன் ஓட்டினார். திருவரங்குளம் அருகே உள்ள வம்பன் செட்டிபாலன் வனப்பகுதியில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் கவிழ்ந்தது.

வாலிபர் பலி

இதில் படுகாயமடைந்த சுதந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அழகியசோழன் படுகாயமடைந்தார். கார் சேதமடைந்தது. இது குறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அழகியசோழனை மீட்டு சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சுதந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின்பேரில் ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்