ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

ஆக்கிரமிப்புகளை முறையாக கண்டறிந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாலையில் அமர்ந்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-02-10 22:15 GMT
திருவள்ளூர், 

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் புதுமாவிலங்கை கிராமத்தில் அரசுக்கு சொந்தமான வண்டி பாட்டை நிலம் உள்ளது.

இந்த நிலையில் நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து பயன்படுத்தி வருவதாக அரசு அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது.

இதைத்தொடர்ந்து நேற்று திருவள்ளூர் தாசில்தார் விஜயகுமாரி, துணை தாசில்தார் வெங்கடேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு சென்று பொக்லைன் எந்திரம் மூலம் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு இடத்தை அகற்றிக் கொண்டு இருந்தனர்.

இதையறிந்து அங்கு வந்த அப்பகுதியை சேர்ந்த நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றப்படுவதை எதிர்த்து  அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் பொதுமக்கள் ஒன்று திரண்டு ஆக்கிரமிப்புகளை முறையாக கண்டறிந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து கடம்பத்தூர்-பேரம்பாக்கம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்