ரூ.1 கோடி வைர நகைகள் கொள்ளை: கண்காணிப்பு கேமரா பதிவில் சிக்கிய கொள்ளையன் உருவம்

சங்ககிரி அருகே ரூ.1 கோடி வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு கொள்ளையனை பிடிக்க தனிப்படை போலீசார் ஆந்திரா விரைந்துள்ளனர்.

Update: 2020-02-10 23:45 GMT
சங்ககிரி,

தெலுங்கானா மாநிலம் உப்பல் மாவட்டம், விஜயபுரி காலனி பகுதியை சேர்ந்தவர் கவுதம்(வயது 31). இவர் ஐதராபாத்தில் உள்ள பி.எம்.ஜே. என்ற நகைக்கடை ஒன்றில் விற்பனையாளராக வேலை செய்து வந்தார். இந்த கடையின் கிளை கோவையில் அவினாசி ரோட்டில் உள்ளது.

இந்த நிலையில், கடந்த 8-ந் தேதி ஐதராபாத் கடையில் இருந்து கோவையில் உள்ள கடைக்கு வைர நகைகளை கவுதம் கொண்டு சென்றார். அன்று இரவு 8.30 மணிக்கு ஐதராபாத்தில் இருந்து கோவைக்கு செல்லும் ஆம்னி பஸ்சில் அவர் புறப்பட்டு வந்தார். அவர் ரூ.1 கோடியே 4 லட்சத்து 30 ஆயிரத்து 313 மதிப்பிலான வைர நகைகளை ஒரு பேக்கில் வைத்து கொண்டு வந்தார்.

9-ந் தேதி காலை 9.30 மணிக்கு சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே வைகுந்தத்தை அடுத்துள்ள ஒரு ஓட்டல் முன்பு ஆம்னி பஸ் நின்றது. அதில் இருந்து பயணிகள் இறங்கி சாப்பிட சென்றனர். கவுதமும், வைர நகை உள்ள பேக்கை தனது இருக்கையில் வைத்து விட்டு சாப்பிட சென்றார். அப்போது கண்டக்டர் பஸ்சின் கதவை பூட்டி விட்டு அவரும் சாப்பிட சென்று விட்டார்.

கொள்ளை

அதே நேரத்தில் அங்கு ஒரு கார் வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய மர்ம நபர் ஒருவர், டிரைவர் இருக்கையின் கதவு வழியாக உள்ளே புகுந்து, வைர நகைகள் இருந்த பேக்கை திறந்து அதில் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த நகைகளை மட்டும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். கவுதம் திரும்ப வந்து பார்த்த போது, நகைகள் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து கோவையில் உள்ள நகைக்கடை மேலாளருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் நகைக்கடை மேலாளர் சந்தோஷ் விரைந்து வந்து சம்பவம் குறித்து சங்ககிரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முதற்கட்டமாக அந்த ஓட்டலில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்த போது, அதில் ஆம்னி பஸ்சுக்குள் புகுந்து வைர நகைகளை ஒருவர் கொள்ளை அடிக்கும் காட்சிகள் பதிவாகி உள்ளது. இதில் அந்த நபர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

4 தனிப்படைகள்

இந்த நிலையில், கொள்ளையர்களை பிடிக்க சங்ககிரி துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதில் 2 தனிப்படையினர் கொள்ளையடித்தவர் வந்த கார் அதே சாலையில் சென்றுள்ளதால், அருகில் சுங்கச்சாவடி பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் தனியார் நிறுவன கேமராக்களையும் ஆய்வு செய்தனர். சம்பவம் நடந்த போது ஆம்னி பஸ் டிரைவர் இருக்கை பூட்டாமல் இருப்பதால் அவருக்கும் இந்த கொள்ளையில் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் மற்ெறாரு தனிப்படையினர் விசாரித்து வருகின்றனர். கொள்ளையன் உருவம் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் போல் உள்ளதால், மற்றொரு தனிப்படையினர் ஆந்திர மாநிலத்திற்கு விரைந்துள்ளனர்.

நகைக்கடை ஊழியர்கள் தொடர்பு இல்லாமல் நகை கொண்டு செல்லப்படும் விவரம் வெளியே தெரிய வாய்ப்பில்லை என்பதால் காரில் வந்தவர்களில் நிச்சயம் ஒருவர் கடையில் பணிபுரிபவராக இருக்கலாம் என்பதால் அவர் யார்? என்பதை கண்டறிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்