உணவு பாதுகாப்புத் துறை அதிகாரியின் ஜீப் டயர் நூதன முறையில் திருட்டு

உணவு பாதுகாப்பு த்துறை அதிகாரியின் ஜீப் டயரை நூதன முறையில் திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2020-02-12 22:00 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறையில், அதன் நியமன அதிகாரியின் ஜீப் ஒன்று பயன்படுத்தப்படாமல், கலெக்டர் அலுவலகத்தின் பின்புறத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மர்மநபர்கள் அந்த ஜீப்பின் டயரை நூதன முறையில் திருடி சென்றுவிட்டனர்.

அதாவது, அந்த ஜீப்பின் டிரைவர் இருக்கையின் வலப்புறம் பின்னால் உள்ள நல்ல டயரை கழற்றி எடுத்து விட்டு பயன்படுத்த முடியாத டயரை, அதில் மாட்டிவிட்டு சென்விட்டனர்.

இந்த நிலையில் நேற்று, ஜீப்பின் டயர் பழையது போல் இருந்ததை கண்ட உணவு பாதுகாப்புத் துறை ஊழியர்கள், இதுகுறித்து பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு, அந்த ஜீப்பின் டிரைவர் இருக்கையின் இடதுபுறத்தில் பின்னால் உள்ள நல்ல டயரை கழற்றி திருடிவிட்டு, பயன்படுத்த முடியாத டயரை மாட்டி விட்டு சென்றது குறிப்பிடத்தக்கது. தற்போது, மீண்டும் அவ்வாறு திருடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நூதன திருட்டை தடுக்க கலெக்டர் அலுவலக வளாகத்தில் வாகன நிறுத்தும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று டிரைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்