கடலூர் முதுநகர் அருகே, பாலில் வி‌‌ஷம் கலந்து குடித்து தந்தை-மகள் தற்கொலை

கடலூர் முதுநகர் அருகே பாலில் வி‌‌ஷம் கலந்து குடித்து தந்தை-மகள் தற்கொலை செய்து கொண்டனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

Update: 2020-02-12 23:00 GMT
கடலூர் முதுநகர்,

கடலூர் முதுநகர் அருகே உள்ள கண்ணாரப்பேட்டை பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் பாவாடைசாமி (வயது 58), பித்தளை பொருட்கள் செய்யும் தொழிலாளி. இவருக்கு சபரிராஜன், மணிகண்டன் என்ற 2 மகன்களும், சங்கீதா(28) என்ற மகளும் உள்ளனர். சங்கீதாவுக்கும், புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த ராஜே‌‌ஷ் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணமான ஒரு மாதத்திலேயே கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சங்கீதா தனது கணவரை பிரிந்து கண்ணாரப்பேட்டையில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் ராஜே‌‌ஷ் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இதற்கிடையே கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ராஜே‌‌ஷ், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய இருப்பதாக சங்கீதாவுக்கு தகவல் கிடைத்தது. இதனால் அவரும், பாவாடைசாமியும் கடந்த சில தினங்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டனர். இந்த நிலையில் நேற்று காலை சங்கீதாவும், பாவாடைசாமியும் பாலில் வி‌‌ஷம் கலந்து குடித்ததாக தெரிகிறது. இதில் அவர்கள் இருவரும் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள், சங்கீதாவும், பாவாடை சாமியும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர், 2 பேரின் உடல்களையும் பார்த்து கதறி அழுதது காண்போரின் நெஞ்சை கரைய வைப்பதாக இருந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சங்கீதாவுக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால், அவர் வரதட்சணை கொடுமையால் இறந்தாரா என்பது குறித்து கோட்டாட்சியர் விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தந்தை-மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்