காரைக்குடி அருகே, உதவித்தொகைக்கு பரிந்துரை செய்ய ரூ.1000 லஞ்சம்; பெண் அதிகாரி கைது

காரைக்குடி அருகே, முதியோர் உதவித்தொகைக்கு பரிந்துரை செய்ய ரூ.1000 லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கைது செய்யப்பட்டார்.

Update: 2020-02-13 23:00 GMT
காரைக்குடி,

சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை பிர்கா வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருபவர், ஜீவா (வயது41), மாற்றுத்திறனாளி. இவர் சிங்கம்புணரியை சேர்ந்தவர். அவருடைய கணவர் கண்ணன். இவர்கள் தற்போது திருப்பத்தூரில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இலுப்பைக்குடியை சேர்ந்த சுப்பு என்பவர் முதியோர் உதவித் தொகைக்காக விண்ணப்பித்துள்ளார். நீண்ட நாட்கள் ஆகியும் அவருக்கு முதியோர் உதவித்தொகை கிடைக்கவில்லை.

வருவாய் ஆய்வாளரான ஜீவா அவரது விண்ணப்பத்தை பரிந்துரை செய்யவில்லை. இதுகுறித்து சுப்பு கேட்டபோது, தனக்கு ரூ.1000 கொடுத்தால்தான் முதியோர் உதவித்தொகை கிடைக்க வழிசெய்யப்படும் என ஜீவா கூறியதாக தெரிகிறது.

இதுகுறித்து சுப்பு, சிவகங்கையில் உள்ள லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமன்னனிடம் புகார் செய்தார்.

அவரது ஆலோசனையின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை சுப்புவிடம் கொடுத்து, அதனை வருவாய் ஆய்வாளரிடம் கொடுக்குமாறு கூறியுள்ளனர்.

அதன்படி சுப்புவும், வருவாய் ஆய்வாளர் ஜீவாவிடம் அந்த ரூபாய் நோட்டுகளை கொடுத்துள்ளார். அதனை ஜீவா வாங்கும்போது அங்கு மறைந்து நின்றிருந்த லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமன்னன், இன்ஸ்பெக்டர் குமரகுரு மற்றும் போலீசார் வருவாய் ஆய்வாளர் ஜீவாவை கைது செய்தனர்.

மேலும் போலீசார் அவரிடம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அங்கு தீவிர விசாரணை நடத்தினர். அதனைதொடர்ந்து அங்கிருந்த ஆவணங்களை கைப்பற்றி ஜீவாவை, மேல்விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

மேலும் செய்திகள்