மனைவி விவாகரத்து கேட்டதால் தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

மனைவி விவாகரத்து கேட்டதால் தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2020-02-13 23:00 GMT
ஆத்தூர்,

ஆத்தூர் அருகே உள்ள கீரிப்பட்டி பேரூராட்சி 12-வது வார்டு மேற்கு காட்டுக்கொட்டகை பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவருடைய மனைவி சின்ன பாப்பா. இவர்களுடைய மகன் செந்தில் குமார் (வயது 32). இவருக்கும், நாமக்கல்லை சேர்ந்த நிவேதா என்ற பெண்ணுக்கும் கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

செந்தில்குமார் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக செந்தில்குமார், நிவேதா இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். நிவேதா அவரது தாயார் வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் தனது கணவரிடம் ஜீவனாம்சம் மற்றும் விவாகரத்து கேட்டு நிவேதா நாமக்கல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த செந்தில்குமார், நேற்று காலை தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும், மல்லியக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் வீரமணி ஆகியோர் அங்கு விரைந்து சென்று செந்தில்குமாரின் உடலை கைப்பற்றி ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்