சைதாப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அடுக்குமாடி கட்டிடம் கட்ட ரூ.40 கோடி ஒதுக்கக்கோரி வழக்கு தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு நோட்டீஸ்

சைதாப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அடுக்குமாடி கட்டிடம் கட்ட ரூ.40 கோடி ஒதுக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கிற்கு பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-02-14 00:04 GMT
சென்னை,

சென்னை பட்டாபிராமை சேர்ந்த ஆர்.விஸ்வநாதன் என்பவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

அரசு ஆஸ்பத்திரி

சென்னை சைதாபேட்டை அரசு ஆஸ்பத்திரி 1920-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த மக்கள் உடல் நலக்குறைவு ஏற்பட்டால், இங்குதான் சிகிச்சை பெற்றுச்செல்வார்கள். தற்போதும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெறுகின்றனர். ஆனால், 1970-ம் ஆண்டு பின்னர், மக்கள்தொகைக்கு ஏற்ப இந்த ஆஸ்பத்திரியில் ஊழியர்கள் பணியிடங்களை அதிகரிக்கவில்லை. சென்னை மாவட்டத்தில் இந்த ஆஸ்பத்திரி இருந்தும், காஞ்சீபுரம் மாவட்ட சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் இன்றும் உள்ளது.

ரூ.40 கோடி ஒதுக்க வேண்டும்

இந்த ஆஸ்பத்திரி வளாகத்தில் இருந்து பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு, அங்கு ரூ.40 கோடி மதிப்பீட்டில், 26 ஆயிரத்து 921 சதுர அடியில் 8 அடுக்கு மாடி கட்டிடம் கட்ட தமிழக அரசு கடந்த 2017-ம் ஆண்டு திட்டமிட்டது. ஆனால், இந்த நிதியை இதுவரை ஒதுக்கவில்லை.

எனவே, இந்த ஆஸ்பத்திரியை சென்னை மாவட்ட சுகாதாரத்துறை நிர்வாக கட்டுப்பாட்டுக்கு மாற்றவும், 8 அடுக்கு மாடி கட்டிடம் கட்ட ரூ.40 கோடியை ஒதுக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, இந்த மனுவுக்கு பதில் அளிக்க தமிழக சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்