புதுச்சத்திரத்தில், மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதல்; என்ஜினீயர் சாவு

புதுச்சத்திரத்தில் மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2020-02-17 22:45 GMT
புவனகிரி, 

கடலூர் கோண்டூரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் சேதுராமன் (வயது 30) என்ஜினீயர். இவர் நேற்று முன்தினம் சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் சிதம்பரத்துக்கு சென்றார். அங்கு வேலை முடிந்ததும் அதே மோட்டார் சைக்கிளில் ஊர் திரும்பினார். புதுச்சத்திரம் சார்பதிவாளர் அலுவலகம் அருகே சென்றபோது, மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக சேதுராமனின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோர மரத்தில் மோதியது.

இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த சேதுராமன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த தகவலின் பேரில் புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சேதுராமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதனிடையே மருத்துவமனைக்கு வந்த உறவினர்கள் சேதுராமனின் உடலை பார்த்து கதறி அழுதனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கடலூர் கோண்டூர் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்