தரமான சாலை அமைக்க கூறி பொதுமக்கள் வாக்குவாதம்

ஆம்பூர் அருகே தரமான சாலை அமைக்கக்கோரி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-02-18 22:15 GMT
ஆம்பூர், 

ஆம்பூர் அருகே நாயக்கனேரி ஊராட்சியில் உள்ள காமனூர்தட்டு, பனங்காட்டேரி மலைக்கிராமங்களில் 1,000–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த மலை கிராமங்களுக்கு செல்ல சாலை வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதிபட்டு வந்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.

இதையடுத்து சாலை அமைக்க ரூ.1¼ கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து தற்போது சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இந்தநிலையில் தரமற்ற முறையில் சாலை அமைக்கப்படுவதாக தகவல் வந்தது. இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று அங்கு வந்து சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டவர்களிடம் தரமான சாலை அமைக்க வேண்டும். தரமில்லாத சாலைகள் அமைத்தால் போராட்டம் நடத்துவோம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் தரமான முறையில் சாலை அமைக்கப்படும் என்று அவர்கள் கூறியதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்