பிளஸ்-2 பொதுத்தேர்வு வருகிற 2-ந் தேதி தொடக்கம்: மாவட்டத்தில் 37,387 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்

வருகிற 2-ந் தேதி தொடங்கும் பிளஸ்-2 பொதுத்தேர்வை சேலம் மாவட்டத்தில் 37 ஆயிரத்து 387 பேர் எழுதுகின்றனர். இதற்கான முன்னேற்பாடு பணி குறித்து நேற்று கலெக்டர் ராமன் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது.

Update: 2020-02-20 23:30 GMT
சேலம்,

பள்ளி கல்வித்துறையின் சார்பில் பிளஸ்-2 பொதுத்தேர்வு வருகிற 2-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி வரை நடைபெறுகிறது. சேலம் மாவட்டத்தில் இந்த தேர்வை 17,048 மாணவர்கள், 20,339 மாணவிகள் என மொத்தம் 37 ஆயிரத்து 387 பேர் எழுதுகின்றனர். இதில் 99 மாற்றுத்திறனாளிகள் இடம்பெற்றுள்ளனர். இந்த தேர்வு 130 மையங்களில் நடக்கிறது.

இதேபோல் பிளஸ்-1 பொதுத்தேர்வு வருகிற 4-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை நடக்கிறது. மாவட்டத்தில் 130 தேர்வு மையங்களில் நடக்கும் இந்த தேர்வை 17,683 மாணவர்கள், 20,561 மாணவிகள் என மொத்தம் 38 ஆயிரத்து 244 பேர் எழுதுகின்றனர். இதில் 116 மாற்றுத்திறனாளிகள் இடம்பெற்றுள்ளனர்.

முன்னேற்பாடு பணிகள்

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு அடுத்த மாதம்(மார்ச்) 27-ந் தேதி முதல் ஏப்ரல் மாதம் 13-ந் தேதி வரை நடக்கிறது. மாவட்டத்தில் 164 மையங்களில் நடக்கும் இந்த தேர்வை 45 ஆயிரத்து 63 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.

இந்த நிலையில் பொதுத்தேர்வுகள் நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். பொதுத்தேர்வுகளுக்கான முன்னேற்பாடு பணிகளை எப்படி மேற்கொள்வது? என்பது குறித்து அனைத்துத்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

பறக்கும்படை குழுக்கள்

ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் ராமன் பேசியதாவது:-

பொதுத்தேர்வுகள் நடைபெறும் மையங்களில் 135 முதன்மை கண்காணிப் பாளர்களும், 135 துறை அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களில் விதிகளை மீறுபவர்களின் மீது போலீசார் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தேர்வு மையங்களை கண்காணிக்க முதுகலை ஆசிரியர்கள் நிலையில் 320 பறக்கும்படை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு நடைபெறும் நாளன்று தேர்வு மையங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வம், தேர்வுத்துறை உதவி இயக்குனர் சண்முகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்