பணிநிரந்தரம் தொடர்பாக என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் பேச்சுவார்த்தை

பணிநிரந்தரம் தொடர்பாக என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் உதவி ஆணையருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

Update: 2020-02-20 23:51 GMT
புதுச்சேரி,

என்.எல்.சி.யில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும் என்ற கோரிக்கையை ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். அவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி வருகிற மார்ச் மாதம் 2-ந்தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்துக்கு நோட்டீசு கொடுத்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து புதுவை தொழிலாளர் நல உதவி ஆணையர் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதன்படி அவர்கள் நேற்று பேச்சுவார்த்தைக்கு வந்தனர்.

நிர்வாக தரப்பில்...

ஆனால் நிர்வாக தரப்பில் யாரும் கலந்துகொள்ளாததால் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. அதேநேரத்தில் பேச்சுவார்த்தைக்கு வந்த ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் சேகர், ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க தலைவர் அந்தோணி செல்வராஜ், சிறப்பு தலைவர் ராமமூர்த்தி, பொருளாளர் கல்யாணசுந்தரம், துணைத்தலைவர் சுரேஷ் ஆகியோர் உதவி ஆணையர் கணேசனிடம் தங்கள் கோரிக்கை தொடர்பாக பேசினார்கள்.

குறிப்பாக இந்த பிரச்சினை தொடர்பாக நடந்த 7 சுற்று பேச்சுவார்த்தையின் சுருக்க நிகழ்வுகள் வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

வேலைநிறுத்தத்துக்கு நோட்டீசு

இதுதொடர்பாக ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் சேகர் கூறும்போது, எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 2-ந்தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்துக்கு நோட்டீசு கொடுத்துள்ளோம். அதற்கு முன்பாக வேறு ஏதேனும் சங்கத்தினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டாலும் நாங்களும் அந்த போராட்டத்தில் கலந்துகொள்வோம் என்றார்.

மேலும் செய்திகள்