திருவாரூர் மாவட்டத்தில் 4 வட்டாரங்களில் ஊரக புத்தாக்க திட்டம் கலெக்டர் தகவல்

திருவாரூர் மாவட்டத்தில் 4 வட்டாரங்களில் ஊரக புத்தாக்க திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என கலெக்டர் ஆனந்த் கூறினார்.

Update: 2020-02-21 23:36 GMT
திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் ஊரக புத்தகாக்க திட்டம் மற்றும் மக்கள் பங்கேற்புடன் கூடிய வளர்ச்சி திட்டம் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஆனந்த் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஊரக புத்தாக்க திட்டம் என்னும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது. இந்த திட்டமானது ஊரக பகுதியில் வறுமை ஒழிப்பு என்னும் செயல்பாட்டையும் தாண்டி தொழில் மேம்பாடு மூலம் பெரும் மாற்றத்தையும் வளர்ச்சியையும் ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, வலங்கைமான், நீடாமங்கலம், முத்துப்பேட்டை ஆகிய 4 வட்டாரங்களில் உள்ள 174 ஊராட்சிகளில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் செயல்படுத்த உள்ளது.

இந்த திட்டத்தில் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் குடும்பங்களை சேர்ந்த பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இந்த திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டாரங்களில் உள்ள வேளாண்மை சார்ந்த மற்றும் வேளாண் சாராத துறைகளை சேர்ந்த உற்பத்தியாளர்கள் இணைந்த குழு கூட்டமைப்பினர், தொழில் முனைவோர்கள் ஆகியோர் பயனாளிகள் ஆவர். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் கூடுதல் கலெக்டரும், திட்ட இயக்குனருமான கமல் கிஷோர், ஊரக புத்தாக்க திட்ட மாவட்ட செயல் அலுவலர் சுந்தரபாண்டியன் மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்