தூத்துக்குடியில் பரபரப்பு ரஜினியை யார் என்று கேட்ட வாலிபர் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் கைது

ரஜினியை யார் என்று கேட்ட வாலிபர் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2020-02-22 22:30 GMT
தூத்துக்குடி, 

ரஜினியை யார் என்று கேட்ட வாலிபர் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருட்டு வழக்கில் வாலிபர் கைது 

தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சாம்குமார் (வயது 27), தனியார் நிறுவன ஊழியர். இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளை தூத்துக்குடியில் உள்ள தனது அலுவலகத்தின் முன்பு நிறுத்தி இருந்தார். அதனை மர்மநபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து அவர் தூத்துக்குடி வடபாகம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பண்டாரம்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த கருவேலம் மகன் சந்தோஷ்ராஜ் (23), ராஜூவ்காந்தி நகரை சேர்ந்த துரை மகன் சரவணன் (21), கால்டுவெல் காலனியை சேர்ந்த துரைப்பாண்டி மகன் மணிகண்டன் (23) ஆகியோர் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

ரஜினியை யார் என்று கேட்டவர் 

கைதான சந்தோஷ்ராஜ் தூத்துக்குடியில் கடந்த 2018–ம் ஆண்டு மே மாதம் நடந்த துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர் ஆவார். அப்போது அவர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்தபோது நடிகர் ரஜினிகாந்த், அங்கு வந்து துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

அப்போது நடிகர் ரஜினிகாந்திடம் சந்தோஷ்ராஜ் நீங்கள் யார்? என்று கேட்டார். இந்த சம்பவம் அந்த நேரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் அவர் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்