பெரம்பலூர் நகராட்சி சார்பில் வரி செலுத்த சிறப்பு ஏற்பாடு
பெரம்பலூர் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) தாண்டவமூர்த்தி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
பெரம்பலூர்,
பெரம்பலூர் நகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி, பாதாள சாக்கடை கட்டணம், பாதாள சாக்கடை வைப்புத்தொகை மற்றும் கடை வாடகை ஆகியவற்றை நிலுவையின்றி உடனடியாக செலுத்தவேண்டும்.
தற்போது நகராட்சி பணியாளர்கள் வரி வசூல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் வரி செலுத்தாதவர்களை நேரில் சந்தித்து வரி செலுத்தக்கோரி 3 நாட்கள் அவகாச அறிவிப்பு கொடுக்கின்றனர்.
இந்த அறிவிப்பினை பெற்றுக்கொண்டு தொகை செலுத்தாதவர்களின் வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு, பாதாள சாக்கடை இணைப்பு துண்டிப்பு மற்றும் நகராட்சி கடைகளை குத்தகை எடுத்து செலுத்தாதவர்கள் கடை உரிமம் ரத்து செய்தல் போன்ற நடவடிக்கைகளும், சொத்துகளின் மீது நீதிமன்ற நடவடிக்கையும் எடுக்கப்படும்.
அலுவலக அனைத்து வேலை நாட்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வரி செலுத்தலாம். பொதுமக்களின் நலன் கருதி பழைய மற்றும் புதிய நகராட்சி அலுவலகங்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் வரிவசூல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் https://tnurbanepay.tn.gov.in என்ற இணையதள வாயிலாகவும் நகராட்சி வரியை செலுத்தலாம்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.