கள்ளக்குறிச்சியில், உத்தேச வாக்குச்சாவடி பட்டியல் - கலெக்டர் கிரண்குராலா வெளியிட்டார்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உத்தேச வாக்குச்சாவடி பட்டியலை கலெக்டர் கிரண்குராலா வெளியிட்டார்.

Update: 2020-02-26 22:00 GMT
கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் வாக்குச்சாவடி அமைப்பது தொடர்பாக உத்தேசிக்கப்பட்ட வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் கிரண் குராலா உத்தேசிக்கப்பட்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியலை வெளியிட்டார். பின்னர் அவர் கூறுகையில், நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ஊரக மற்றும் நகர்புற பகுதிகளில் வாக்குச்சாவடி அமைத்தல் தொடர்பாக உத்தேசிக்கப்பட்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வரைவு வாக்குச்சாவடி பட்டியல்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம், விழுப்புரம் மாவட்ட ஊராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், சிற்றூராட்சி அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் ஆகிய இடங்களில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வரைவு வாக்குச்சாவடி பட்டியல்களில் உள்ள வாக்குச்சாவடிகளின் விவரங்கள் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அடுத்த மாதம்(மார்ச்) 2-ந்தேதி மாலை 5 மணிக்கு கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு கருத்துகளை தெரிவிக்கலாம். இதன் பின்னர் 5-ந்தேதி இறுதி வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்படும் என்றார்.

அப்போது கள்ளக்குறிச்சி சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த், மாவட்ட வருவாய் அலுவலர் சங்கீதா, ஊரக வளர்ச்சி மாவட்ட உதவி இயக்குனர் ரெத்தினமாலா, திருக்கோவிலூர் கோட்டாட்சியர் சாய்வர்த்தினி ஆகியோர் இருந்தனர்.

மேலும் செய்திகள்