காங்கிரசுக்கு, முதல்-மந்திரி எடியூரப்பா வேண்டுகோள்
சட்டசபை சுமுகமாக நடைபெற ஒத்துழைக்க வேண்டும் என்று காங்கிரசுக்கு, முதல்-மந்திரி எடியூரப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெங்களூரு,
முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா என்ன பேச வேண்டும் என்று நினைக்கிறாரோ அதை சபையில் பேசட்டும். நாங்கள் வேண்டாம் என்று கூறவில்லை. சபாநாயகரின் அனுமதியை பெற்று அவர், பேசட்டும். நாங்களும் சபாநாயகரிடம் பேசுகிறோம்.
எச்.எஸ்.துரைசாமி விவகாரம் குறித்து விவாதிக்க அனுமதி வழங்குவதாக சபாநாயகர் உறுதியளித்தார். ஆனாலும் காங்கிரஸ் உறுப்பினர்கள் எப்படி நடந்து கொண்டனர் என்பது அனைவருக்கும் தெரியும். நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக கர்நாடக சட்டசபையில் அரசியல் சாசனம் பற்றி விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு எதிர்க்கட்சி தலைவர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
அரசியல் சாசனம் குறித்து சபையில் அதிக நேரம் விவாதிக்கப்பட வேண்டியது அவசியம். காங்கிரஸ் தனது சுயகவுரவத்தை விட்டு சபை சுமுகமாக நடைபெற ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.