நன்னடத்தை உறுதிமொழியை மீறி குற்றச்செயல் செய்தவருக்கு 330 நாள் சிறை ஆர்.டி.ஓ. உத்தரவு

நன்னடத்தை உறுதிமொழியை மீறி குற்றச்செயல் செய்தவருக்கு 330 நாள் சிறைத்தண்டனை வழங்கி ஆர்.டி.ஓ. உத்தரவிட்டார்.;

Update:2020-03-14 03:45 IST
வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த தைலாவரம் அம்பேத்கர் தெரு, வள்ளலார் நகர் பகுதியை சேர்ந்தவர் சுந்தர் என்கிற சுந்தரராஜன் (வயது 43), இவர் மீது கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. தொடர் குற்றங்களில் ஈடுபட்டதால் கூடுவாஞ்சேரி போலீசார் சுந்தர் மீது வழக்குப்பதிவு செய்து கடந்த ஜனவரி மாதம் தாம்பரம் ஆர்.டி.ஓ. ராஜ்குமாரிடம் சுந்தரை ஆஜர்ப்படுத்தினர்.

அப்போது சுந்தர் ஒரு ஆண்டு காலம் பொது அமைதியை காப்பேன் என்று கூறி ரூ.50 ஆயிரம் பிணையப் பத்திரத்தில் எழுதி கொடுத்து ஆர்.டி.ஓ.விடம் ஜாமீன் பெற்றார்.

இதற்கிடையில் கடந்த பிப்ரவரி மாதம் 13-ந்தேதி தேதி கூடுவாஞ்சேரியை அடுத்த மாடம்பாக்கம் பாரதியார் தெருவை சேர்ந்த சங்கீதா (31), என்ற பெண்ணை சுந்தர் கத்தியால் வெட்டி விட்டார். இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தரை கைது செய்து செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர். நன்னடத்தை விதிகளை மீறியதால் சுந்தர் மீது நடவடிக்கை எடுக்கும்படி தாம்பரம் ஆர்.டி.ஓ.விடம் கூடுவாஞ்சேரி போலீசார் புகார் செய்தனர். இதனையடுத்து நன்னடத்தை விதியை மீறியதற்காக 330 நாட்கள் சுந்தரை சிறையில் அடைக்கும்படி தாம்பரம் ஆர்.டி.ஓ. உத்தரவிட்டார்.

இதனையடுத்து ஆர்.டி.ஓ. உத்தரவு நகலை போலீசார் செங்கல்பட்டு மாவட்ட சிறைத்துறை அதிகாரிகளிடம் வழங்கினர். இதனை தொடர்ந்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்