மின்சார வாரிய பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 5 ஆயிரம் கேங்மேன் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு உடற்தகுதி தேர்வு கடந்த டிசம்பர் மாதம் நடந்தது.

Update: 2020-03-15 22:30 GMT
பெரம்பலூர்,

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 5 ஆயிரம் கேங்மேன் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு உடற்தகுதி தேர்வு கடந்த டிசம்பர் மாதம் நடந்தது. உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்திற்கான எழுத்துத் தேர்வு பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் நேற்று நடந்தது. பெரம்பலூரில் தேர்வு எழுத 807 பேர் தகுதி பெற்றிருந்தனர். இதையொட்டி தேர்வர்கள் காலை 8.30 மணியளவில் இருந்தே வரத்தொடங்கினர். தேர்வு எழுத தேர்வர்களை அறை கண்காணிப்பாளர் சோதனையிட்ட பிறகே உள்ளே அனுமதித்தனர். மேலும் தேர்வு எழுதுவதற்கான தேர்வு மையத்திற்கு அனுமதி சீட்டு (ஹால் டிக்கெட்) மற்றும் ஆதார் அட்டையின் நகல் ஆகியவற்றை தேர்வர்களிடம் வாங்கி சரிபார்த்த பிறகே தேர்வு எழுத அனுமதித்தனர். காலை 11 மணிக்கு தொடங்கிய தேர்வு, மதியம் 1 மணிக்கு முடிவடைந்தது. இதில் 100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடந்தது. தேர்வர்களில் பெண்களில் ஒருவர் மட்டும் தேர்வு எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வு நடக்கும் போது வெளியாட்கள் யாரும் உள்ளே வந்துவிடாத வகையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 

மேலும் செய்திகள்