குடிபோதையில் தகராறு: கல்லால் அடித்து கொத்தனார் கொலை வாலிபர் கைது

திருவையாறு அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கல்லால் அடித்து கொத்தனார் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

Update: 2020-03-16 00:00 GMT
திருவையாறு,

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள வீரசிங்கம்பேட்டை மேட்டுத்தெருவை சேர்ந்தவர் முனியய்யா. இவருடைய மகன் ராஜாமணிமாறன்(வயது33). கொத்தனார். இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் பன்னீர்செல்வம் மகன் ஜீவா(25). இவர்கள் இருவரும் நண்பர்கள். நேற்று மதியம் ராஜாமணிமாறனும், ஜீவாவும் நடுக்கடை பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைக்கு சென்று மது அருந்தினர். பின்னர் கடையில் இருந்து வெளியே வந்த போது அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஜீவா அருகே கிடந்த கல்லை எடுத்து ராஜாமணிமாறனின் தலையில் அடித்ததாக கூறப்படுகிறது.

கைது

தாக்குதலில் படுகாயமடைந்த ராஜாமணிமாறன் சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவையாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் ராஜாமணிமாறன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த திருவையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் திருவையாறு அரசு மருத்துவமனைக்கு சென்று ராஜாமணிமாறன் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும் ஜீவாவை திருவையாறு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட ராஜாமணிமாறனுக்கு திருமணமாகவில்லை. கல்லால் அடித்து கொத்தனார் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருவையாறு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்