கொட்டாம்பட்டி அருகே, 10 கிராமத்தினர் திரண்ட மீன்பிடி திருவிழா

கொட்டாம்பட்டி அருகே நடந்த மீன்பிடி திருவிழாவில் 10 கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Update: 2020-03-15 21:45 GMT
கொட்டாம்பட்டி,

கொட்டாம்பட்டி அருகே உள்ள சொக்கம்பட்டி பகுதியில் 8 வருடங்களுக்கு பின்னர் பருவமழையால் கண்மாய் நிறைந்தது. இதனால் கிராமத்தினர் அங்குள்ள வல்லகுடி கண்மாயில் மீன் குஞ்சுகளை விலைக்கு வாங்கி வளர்த்தனர். தற்போது தண்ணீர் குறைந்து விட்டதால் மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்து பக்கத்து கிராமங்களுக்கு ஒலிபெருக்கி மூலமாக தகவல் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து சுற்று வட்டார பகுதிகளிலிருந்து 10 கிராம பொதுமக்கள் ஏராளமானோர் அதிகாலையிலேயே கண்மாயை வந்தடைந்தனர்.

கிராம முக்கியஸ்தர்கள் வெள்ளைக்கொடி காட்டியதை தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் மீன்பிடி உபகரணங்களான கச்சா, வலை, ஊத்தா உள்ளிட்டவைகளை கொண்டு கண்மாய்க்குள் இறங்கினர். அப்போது நாட்டுவகை மீன்களான கட்லா, சிலேபி, ரோகு, கெண்டை உள்ளிட்ட மீன்களை பிடித்து உற்சாகமடைந்தனர்.

பிடிக்கப்பட்ட மீன்களை யாரும் விற்பனை செய்ய மாட்டார்கள். அவரவர் வீட்டில் சமைத்து இறைவனுக்கு படைத்த பின்னர் உண்ணுவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்று மீன்பிடி திருவிழா நடத்துவதால் வருடந்தோறும் நல்லமழை பொழியும் என்பது இந்த பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

மேலும் செய்திகள்