மயிலாடுதுறையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தர்ணா போராட்டம் 21-வது நாளாக நடந்தது

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மயிலாடுதுறையில் 21-வது நாளாக தர்ணா போராட்டம் நடந்தது.

Update: 2020-03-17 00:00 GMT
குத்தாலம்,

மயிலாடுதுறை சின்ன பள்ளிவாசல் தெருவில் நாகை மாவட்ட அனைத்து ஜமாத் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நேற்று 21-வது நாளாக தர்ணா போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு புத்தூர் ஜமாத் தலைவர் நைனா முகமது தலைமை தாங்கினார். நிர்வாகிகள் திருச்சம்பள்ளி ‌ஷாஜகான், கிளியனூர் இர்பான், ரபீக், சபீருதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தின்போது குடியுரிமை திருத்த சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தமாட்டோம் என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று கோ‌‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். போராட்டத்தில் புத்தூர், தைக்கால் ஆகிய கிராமங்களை சேர்ந்த பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

6 பேர் மீது வழக்கு

நேற்றுமுன்தினம் தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் ‌ஷாஜகான், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினர் சம்சுல் இக்பால் தாவூத், மாவட்ட செயலாளர் நவாஸ்கான், மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன், நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் காளிதாஸ், சீனிவாசபுரம் முகமது இஸ்மாயில் ஆகிய 6 பேர் மீது மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

மேலும் செய்திகள்