கொரோனா வைரஸ் விழிப்புணர்வு குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் ரத்னா தலைமையில் நடந்தது

கொரோனா வைரஸ் விழிப்புணர்வு குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் ரத்னா தலைமையில் நடந்தது.

Update: 2020-03-16 23:00 GMT
அரியலூர்,

அரியலூரில், மாவட்ட நிர்வாகம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு குறித்து அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் ரத்னா தலைமையில் நடந்தது. அப்போது கலெக்டர் ரத்னா பேசுகையில், கொரோனா வைரஸ் காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரியலூர் மாவட்டத்தில் ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களான கோவில், மசூதிகள், தேவாலயங்கள் ஆகியவற்றில் தூய்மை படுத்தும் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்ற மாநிலங்களுக்கு பயணிப்பதையும், பொது இடங்களில் அதிக அளவு மக்கள் கூடும் இடங்களில் கூடுவதையும் தவிர்க்க வேண்டும். வயதானவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த நபர்கள் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும் தனிநபர் சுகாதாரத்தினை காக்க வேண்டும். குறிப்பாக வீட்டிற்குள் நுழையும் போதும், அவ்வப்போது கைகளை சோப்பு போட்டு சுத்தமாகவும் கழுவ வேண்டும். கைகளை சுத்தம் செய்யாமல் முகத்தை தொட வேண்டாம். சமீபத்தில் வெளிநாடுகளுக்கு பயணம் செய்தவர்கள் இருமல், சளி, காய்ச்சல், மூச்சு திணறல் ஏற்பட்டால் அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு சென்று ஆலோசனை பெற வேண்டும். மேலும் அவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்க தேவையான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 24 மணி நேர உதவி எண்கள் 011-23978046, 044-29510400, 044- 29510500-ல் தகவல் தெரிவிக்கலாம். மேலும் 104 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்றார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி, மருத்துவக்கல்லூரி தலைவர் முத்துகிருஷ்ணன், திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) சுந்தர்ராஜன், துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) ஹேமசந்த் காந்தி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பழனிசாமி, கோட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தாசில்தார்கள், வட்டார மருத்துவர் அலுவலர்கள், மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்