திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர்கள், பணிகளை புறக்கணித்து போராட்டம்

கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காததை கண்டித்து திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-03-19 23:30 GMT
திருவாரூர்,

திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனியார் நிறுவனத்தின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு மற்றும் பாதுகாப்பு பணியில் சுமார் 180 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை. மேலும் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் மருத்துவமனை நிர்வாகம் முக கவசம், பாதுகாப்பு உடை, உயிரி தடுப்பு திரவம் உள்ளிட்ட எந்தவித பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கவில்லை என தெரிகிறது.

இதுகுறித்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்திடம் மனு அளித்தும் இதுவரை வழங்கப்படவில்லை. எனவே உடனடியாக சம்பளம் வழங்கிட கோரியும், கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காததை கண்டித்தும் ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று காலை பணிகளை புறக்கணித்து மருத்துவமனை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு ஒப்பந்த தொழிலாளர் சங்க தலைவர் சசிகுமார் தலைமை தாங்கினார்.

பரபரப்பு

இதில் சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன், மாவட்ட தலைவர் மாலதி, மாவட்ட துணைத்தலைவர் பழனிவேல், ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் அனிபா, சங்கத்தின் துணைத்தலைவர் ஜெயசுதா, உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌‌ஷங்கள் எழுப்பினர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்