ஆரணி அருகே, காதல் தகராறில் கட்டிட மேஸ்திரி அடித்து கொலை - 2 பேர் கைது

ஆரணி அருகே காதல் தகராறில் கட்டிட மேஸ்திரி அடித்து கொலைசெய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-03-30 22:15 GMT
ஆரணி,

ஆரணியை அடுத்த மொரப்பந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் சுதாகர் (வயது 24). சென்னையில் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்துவந்தார். இவரும் அதே ஊரை சேர்ந்த 19 வயது பெண்ணும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு சுதாகர், தனது காதலியை அழைத்துச்சென்று திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து வந்ததாக தெரிகிறது.

இளம்பெண்ணை அவருடைய பெற்றோர் தேடிவந்தனர். சுதாகரும், இளம்பெண்ணும் இருக்கும் இடம் தெரிந்து இளம்பெண்ணை அவருடைய தந்தை ஊருக்கு அழைத்துவந்துவிட்டார். இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதன் காரணமாக சுதாகர் ஊருக்கு வந்துள்ளார்.

ஊருக்கு வந்த அவர் தனது காதலிக்கு அடிக்கடி போன் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் இளம்பெண்ணின் உறவினர்கள் ஆத்திரமடைந்தனர். இந்த நிலையில் அங்குள்ள ஏரிக்கரைக்கு வந்த சுதாகரை மூர்த்தி அவரது அக்கா மகன் கதிரவன் ஆகிய இருவரும் இரும்பு ராடால் தாக்கி உள்ளனர். இதில் தலையில் படுகாயமடைந்த சுதாகர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில், ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுதாகர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மூர்த்தி, கதிரவன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்