கொரோனாவை தடுக்க மத தலைவர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - முதல்-மந்திரி எடியூரப்பா வேண்டுகோள்

கொரோனாவை தடுக்க மத தலைவர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2020-04-02 23:53 GMT
பெங்களூரு,

கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

டெல்லி நிஜாமுதீனில் நடைபெற்ற மாநாட்டில் கர்நாடகத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இதில் இதுவரை 391 பேரை அடையாளம் கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகிறோம். மீதம் உள்ளவர்களையும் கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

மத பிரசாரம் செய்ய மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்றுள்ளனர். ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் அவர்கள் ஆங்காங்கே சிக்கியுள்ளனர். அவர்களை ஆங்காங்கே தனிமைப்படுத்தி வைத்துள்ளோம். இதுகுறித்து தொழில்நுட்ப ரீதியாக விசாரணை நடைபெற்று வருகிறது.

அவர்கள் அனைவரையும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த முடிவு செய்துள்ளோம். அவர்களில் பீதரில் 91 பேரின் ரத்த மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதில் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. பெங்களூருவில் 30-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவர்களுக்கு வைரஸ் பாதிப்பு இல்லை என்று உறுதியாகியுள்ளது.

கொரோனாவை தடுக்க அனைத்து மத தலைவர்களும் அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும். அவரவர்கள் தங்களின் சமூக மக்களிடம் தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்தி உதவி புரிய வேண்டும்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

மேலும் செய்திகள்