நீலகிரியில் 292 போலீசாருக்கு விடுமுறை: போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் தன்னார்வலர்கள்

நீலகிரியில் 292 போலீசாருக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

Update: 2020-04-04 22:30 GMT
ஊட்டி,

நீலகிரியில் உள்ள மொத்த போலீசாரில் 33 சதவீதத்தினருக்கு (அதாவது 292 பேர்) நேற்று முன்தினம் முதல் ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் அனைத்து போலீசாருக்கும் சுழற்சி முறையில் விடுமுறை அளிக்கப்பட உள்ளது. இதனால் நேற்று ஊட்டி சேரிங்கிராஸ், மணிக்கூண்டு, ஏ.டி.சி., மத்திய பஸ் நிலையம், பிங்கர்போஸ்ட், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் குறைந்த எண்ணிக்கையிலேயே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் ஊட்டியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

அவர்கள் திறந்தவெளி சந்தைகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து அத்தியாவசிய பொருட்களை வாங்கவும், முக்கவசம் அணியவும் தன்னார்வலர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

மதுக்கடைகள் மூடப்பட்டு உள்ளதால் மதுபிரியர்கள் திண்டாடி வருகின்றனர். இதை பயன்படுத்தி சிலர் மறைமுகமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்கின்றனர். அவர்களை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் சட்டத்திற்கு புறம்பாக சாராயம் காய்ச்சினாலோ அல்லது விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை நோட்டீசுகள் ஆங்காங்கே ஒட்டப்பட்டு உள்ளன. 

மேலும் செய்திகள்