திருப்பூர் மாவட்டத்தில் பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் - முககவசம் அணியாவிட்டால் ரூ.100 விதிக்கப்படும்

திருப்பூர் மாவட்டத்தில் பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதமும், முக கவசம் அணியாவிட்டால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் விஜயகார்த்திகேயன் அறிவித்துள்ளார்.

Update: 2020-04-15 23:15 GMT
திருப்பூர், 

கொரோனா வைரஸ் பரவுவதை முற்றிலும் தடுத்திடும் வகையில் சமூக தனிமைப்படுத்துதலை தீவிரப்படுத்தும் வகையில் தமிழக அரசு உத்தரவின் பேரில் திருப்பூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு மே மாதம் 3-ந் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அத்தியாவசிய தேவைகளுக்காக சந்தைகள், மளிகை கடைகள், பழக்கடைகள், மருந்தகங்கள், இறைச்சி கடைகளில் கூடும் பொதுமக்கள் போதிய சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

பொது இடங்களில் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். அவ்வாறு முக கவசம் அணியாவிட்டால் அவர்களுக்கு ரூ.100 உடனடி அபராதம் விதிக்கப்படும். அதுபோல் பொது இடங்களில் எச்சில் துப்பினால் அவர்களுக்கு உடனடியாக ரூ.500 அபராதம் மாநகராட்சி மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி துறை அதிகாரிகளால் விதிக்கப்படும். இந்த நடவடிக்கை இன்று (வியாழக்கிழமை) முதல் அமல்படுத்தப்படுகிறது.

திருப்பூர் மாவட்ட மக்கள் அத்தியாவசிய தேவை இல்லாமல் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றி கொரோனா நோய் தொற்று பரவுவதை தடுக்க மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைக்க வேண்டும். மேற்கண்ட தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்