ராணிப்பேட்டை மாவட்டத்தில், தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் வீடியோகால் மூலம் நலம் விசாரிப்பு - மருத்துவ ஆலோசனை பெற எண்கள் அறிவிப்பு

கொரோனா நடவடிக்கையால் தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் வீடியோகால் மூலமாக மருத்துவர்கள் தொடர்பு கொண்டு நலம் விசாரித்து வருகின்றனர். அதற்கான எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி கூறியதாவது:-

Update: 2020-04-18 06:56 GMT
ராணிப்பேட்டை,

கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் நோய் தொற்று ஏற்படாமல் இருக்க, வீடுகளில் பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களை கண்காணிக்க, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது.

அங்கு இருந்தபடியே மருத்துவர்கள், செல்போன் வீடியோகால், ஆடியோ கால் மூலமாகத் தினமும் தொடர்பு கொண்டு தனிமைப்படுத்தப்பட்டவர்கள், அவர்களுடைய குடும்பத்தினர், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் ஆகியோரிடம் உடல் நலம் பற்றி விசாரித்து வருகின்றனர்.

இதுதவிர ஆஸ்பத்திரிகள், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் மனநலம் பாதிக்கப்படாமல் இருக்கவும், அவர்களுக்கு மன தைரியம் அளிக்கவும், கொரோனா தொற்று சம்பந்தப்பட்ட தகவல்களை கேட்டு பெற்றுக் கொள்ளவும், மனநல ஆலோசகர்களும் தொடர்பு கொண்டு தகுந்த அறிவுரை, ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள்.

மேலும் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், ‘டெலி மெடி கால்ஸ்’ என்ற பெயரில் தன்னார்வலர்கள், தனியார் மருத்துவர்கள் 24 மணி நேரமும் பொதுமக்களுக்கு மருத்துவம் சார்ந்த அறிவுரைகளை வழங்கி வருகின்றனர். இந்தக் குழுவில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

பொதுமக்கள் ‘டெலி மெடி கால்ஸ்’ மூலமாக பொது மருத்துவம் சார்ந்த அறிவுரைகள், ஆலோசனைகள் பெறுவதற்கு 63696 58563, 88387 83830, 90476 68488, 94430 34003 ஆகிய செல்போன் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த எண்களை மக்கள் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.

மேற்கண்டவாறு கலெக்டர் கூறினார்.

மேலும் செய்திகள்