ஸ்ரீபெரும்புதூர் அருகே, விதிமுறை மீறி இயங்கிய தொழிற்சாலையில் அதிகாரிகள் சோதனை - மதில் சுவர் ஏறி குதித்து தொழிலாளர்கள் ஓட்டம்

ஸ்ரீபெரும்புதூர் அருகே ஊரடங்கின் போது விதிமுறை மீறி இயங்கிய தொழிற்சாலையில் அதிகாரிகள் சோதனை செய்தனர். இதையறிந்த தொழிலாளர்கள் மதில் சுவர் ஏறி குதித்து ஓடினர்.

Update: 2020-04-29 22:45 GMT
ஸ்ரீபெரும்புதூர், 

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து அரசு பல்வேறு வகையில் நடவடிக்கை எடுத்து வந்ததன் தொடர்ச்சியாக, ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து நடை முறையில் உள்ளது.

இந்நிலையில் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மாம்பாக்கம் சிப்காட் பூங்காவில் உள்ள இரும்பு தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் 10 தொழிலாளர்களை வைத்து இயங்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்து இருந்தது. ஆனால் இந்த தொழிற்சாலையில் விதிமுறை மீறி 100 தொழிலாளர்களுடன் இயங்குவதாக ஸ்ரீபெரும்புதூர் வருவாய் துறையினருக்கு புகார் வந்தது.

இதையடுத்து ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ, தாசில்தார் ரமணி உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு சோதனையில் ஈடுபட சென்றனர். அப்போது அதிகாரிகளை உள்ளே விடாமல் தொழிற்சாலையின் நிர்வாகத்தினர் தடுத்தனர். 

அதிகாரிகள் வந்ததை கண்டதும் தொழிலாளர்கள் மதில் சுவர் ஏறி குதித்து ஓடினர். இதையடுத்து, அதிகாரிகள் போலீசார் உதவியுடன் தொழிற்சாலை உள்ளே சென்று, விதிமுறையை மீறி செயல்பட்ட தொழிற்சாலை நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்