வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை கணவர் உள்பட 3 பேர் கைது

உத்தமபாளையம் அருகே வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-04-30 03:45 GMT
உத்தமபாளையம்,

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள பல்லவராயன்பட்டியை சேர்ந்த கோட்டைச்சாமி மகன் சதீஷ்குமார் (வயது 30). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த லாவண்யா (27) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 வயதில் மகன் உள்ளார்.

இவர்களது திருமணத்தின்போது, 30 பவுன் நகை மற்றும் சீர்வரிசை பொருட்களை லாவண்யாவின் குடும்பத்தினர் வரதட்சணையாக கொடுத்தனர். இருப்பினும் கூடுதல் வரதட்சணை வாங்கி வரும்படி சதீஷ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் லாவண்யாவை கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

3 பேர் கைது

இதனால் மனமுடைந்த லாவண்யா, தனது தாய் வீட்டுக்கு வந்தார். பின்னர் அங்கு வீட்டில் வைத்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் மயங்கி கிடந்த லாவண்யாவை, குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதற்கிடையே லாவண்யாவை வரதட்சணை கேட்டு கொடுமை செய்து தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் சதீஷ்குமார், அவரது தாய் ராணி (48), தந்தை கோட்டைச்சாமி (53) ஆகிய 3 பேர் மீது கோம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் லாவண்யாவுக்கு திருமணம் முடிந்து 4 ஆண்டுகளே ஆவதால், உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. முத்தையனும் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்