கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2020-05-07 22:46 GMT
கள்ளக்குறிச்சி,

தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் எதிரில், சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் தலைமையில் டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிரான போராட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. மற்றும் தி.மு.க. ஒன்றிய செயலாளர் பெருமாள், நிர்வாகிகள் கோவிந்தராஜ், செல்வம், சண்முகம் உள்ளிட்ட அனைவரும் கருப்பு பட்டை அணிந்திருந்தனர்.

வடக்கநந்தல்

சங்கராபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் அவரது சொந்த கிராமமான வடக்கநந்தலில் உள்ள அவரது வீட்டில் இருந்து அவரது வீடு உள்ள தெரு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட தி.மு.க.வினருடன் கருப்புபட்டை அணிந்தும், கருப்புக்கொடி ஏந்தியும் சென்று டாஸ்மாக் கடையை மூடக்கோரி முழக்கமிட்டபடி போராட்டம் நடத்தினார்.

விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் அங்கையற்கண்ணி கருப்பு பட்டை அணிந்து கள்ளக்குறிச்சி ராஜா நகரில் உள்ள தன் வீட்டின் முன்பு நின்று டாஸ்மாக் மதுக்கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்களை முழங்கினார்.

தியாகதுருகம்

உளுந்தூர்பேட்டை நகர தி.மு.க. சார்பில் நகரச் செயலாளர் டேனியல் மற்றும் அவரது குடும்பத்தினர் கருப்பு சட்டையும், கருப்பு பட்டையும் அணிந்து தங்களது வீட்டின் முன்பு நின்று டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். இப்போராட்டத்தில் தி.மு.க நகர இளைஞர் அணி குரு, மனோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தியாகதுருகத்தில் நகர தி.மு.க. செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் தி.மு.க.வினர், டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிராக கண்டன போராட்டம் நடத்தினார்கள். இதில் தியாகதுருகம் மவுண்ட் பார்க் பள்ளி தாளாளர் மணிமாறன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு

ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மதுக்கடை திறப்புக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள். ரிஷிவந்தியம் ஒன்றியம் வாணாபுரம் கிராமத்தில் அக்கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினார்கள். இதில் சங்கராபுரம் வட்டக்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், பூமாலை, ஏழுமலை, நாகராஜ், குட்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்