திருச்செங்கோடு அருகே மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம்

திருச்செங்கோடு அருகே மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-05-09 04:34 GMT
எலச்சிபாளையம்,

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள மோடமங்கலத்தில் மதுக்கடை இயங்கி வருகிறது. இங்கு நேற்று முன்தினம் ஆயிரக்கணக்கான மதுப்பிரியர்கள் சமூக இடைவெளியின்றி மது வகைகளை வாங்கி சென்றதாக கூறப்படுகிறது. மேலும் மோடமங்கலம் அருகே உள்ள வெப்படை, இளந்தகுட்டை போன்ற கொரோனோ பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து மதுப்பிரியர்கள் மோடமங்கலம் வந்து மது வகைகளை வாங்கி சென்றதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் தங்கள் ஊரில் மதுக்கடை செயல்படக்கூடாது என்று வலியுறுத்தியும், மதுக்கடையை மூடக்கோரியும் மதுக்கடை அருகே திரண்டு சமூக இடைவெளியை கடைபிடித்து போராட்டம் நடத்தினர்.

கொரோனா ஆபத்து

இந்த போராட்டம் குறித்து தகவலறிந்த திருச்செங்கோடு புறநகர போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் அந்த பகுதிக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது இது தொடர்பாக நாமக்கல் மாவட்ட கலெக்டரிடம் புகார் அளிக்கவும் என போலீசார் கூறி பொதுமக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, நேற்று (நேற்று முன்தினம்) 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மது வாங்க மோடமங்கலம் வந்திருந்தனர். இவர்களால் கொரோனா பரவும் ஆபத்து உள்ளது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க கூறியுள்ளனர். தொடர்ந்து மதுக்கடையை இயக்கினால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறினர்.

இந்த போராட்டம் காரணமாக மோடமங்கலம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்