பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறில் தாக்குதல்: படுகாயம் அடைந்த வாலிபர் சாவு 2 பேர் கைது

மத்தூர் அருகே பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் படுகாயம் அடைந்த வாலிபர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இதனால் இந்த வழக்கை கொலை வழக்காக போலீசார் மாற்றி 2 பேரை கைது செய்தனர்.

Update: 2020-05-12 03:32 GMT
மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள தொகரப்பள்ளியை சேர்ந்தவர் வீரமணி (வயது 30). இவர் சங்கர் என்பவரிடம் பணம் கடன் வாங்கினார். வீரமணியிடம், சங்கர் கொடுத்த பணத்தை பல முறை திருப்பி கேட்டும் கொடுக்கவில்லை. இது குறித்து சங்கர் தனது நண்பரான ராமராஜனிடம் கூறினார். இந்த நிலையில் கடந்த 8-ந்தேதி ராமராஜன் (30), வீரமணியிடம் சென்று சங்கரின் பணத்தை கொடுத்துவிடும்படி கூறியுள்ளார். அதற்கு வீரமணி, சங்கரே பணத்தை கேட்கவில்லை. நீ எதற்காக வந்து பணம் கேட்கிறாய்? என அவரிடம் தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரம் அடைந்த வீரமணி, அவரது நண்பர் இளையராஜாவுடன் சேர்ந்து ராமராஜனின் வயிற்றில் எட்டி உதைத்தார்.

வாலிபர் சாவு

இதில் பலத்த காயம் அடைந்த ராமராஜனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி அரசு மருத்துவமனைகளில் அவர் அனு மதிக்கப்பட்டார். ஆனால் வயிற்றில் வலி குறையாததால், ராமராஜனை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் ராமராஜன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் மத்தூர் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து வீரமணி, இளையராஜா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் வாலிபர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்