‘திருமணம் பிரித்து விடுமோ?’ என்ற கவலையில் மணப்பெண், தோழியுடன் தூக்குப்போட்டு தற்கொலை

எலச்சிபாளையம் அருகே திருமணம் தங்களை பிரித்து விடுமோ? என்ற கவலையில் மணப்பெண், தோழியுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2020-05-17 03:35 GMT
எலச்சிபாளையம்,

நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் அருகே உள்ள கோக்கலை எளையாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார். இவரது மனைவி ஜோதி (வயது 23). இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. ஜோதியின் தந்தை கிருஷ்ணமூர்த்தி, தாய் சரோஜா ஆகியோர் கடந்த 6 மாதங்களாக கேரளாவில் கூலி வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஜோதி கணவரை பிரிந்து பெரியமணலியில் உள்ள பெற்றோர் வீட்டில் தங்கி இருந்தார். அப்போது அதே பகுதியில் உள்ள தறிப்பட்டறைக்கு அவர் வேலைக்கு சென்று வந்தார்.

இந்த தறிப்பட்டறையில் கோட்டப்பாளையத்தை சேர்ந்த சண்முகம் என்பவரது மகள் பிரியா (20) என்பவரும் வேலை செய்து வந்தார். சண்முகம் இறந்து விட்டார். தற்போது பிரியா தாய் சுவேதாவுடன் வசித்து வந்தார். இன்னும் அவருக்கு திருமணம் ஆகவில்லை. ஜோதிக்கும், பிரியாவுக்கும் வேலை செய்யும் இடத்தில் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் இணை பிரியாத தோழிகளாக பழகி வந்தனர். எங்கு சென்றாலும் ஒன்றாகவே சென்று வரும் அளவுக்கு நெருங்கி பழகி வந்துள்ளனர்.

மேலும் அடிக்கடி போனில் பேசிக்கொள்வார்களாம்.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்த நிலையில் வருகிற 27-ந் தேதி பிரியாவுக்கு திருமணம் நடைபெற இருந்தது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது. இதற்கிடையில் திருமணம் நடந்தால் நெருங்கிய தோழியான ஜோதியை பிரிய நேரிடுமே என்று மணப்பெண் பிரியா மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று காலை பிரியா, தாயிடம் கூறிவிட்டு சைக்கிளில் ஜோதி வீட்டுக்கு வந்தார். அங்கு இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தனர். பின்னர் இருவரும் ஒரே சேலையில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

இதற்கிடையில் மதியம் வெகுநேரம் ஆகியும் பிரியா வீட்டுக்கு வராததால் சந்தேகம் அடைந்த அவரது தாய் சுவேதா, ஜோதியின் வீட்டுக்கு சென்றார். அங்கு கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. பின்னர் அக்கம், பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு பிரியாவும், ஜோதியும் ஒரே சேலையில் தூக்கில் பிணமாக தொங்கியது தெரியவந்தது.

இதைப்பார்த்து சுவேதா அதிர்ச்சி அடைந்தார். மகளின் உடலை பார்த்து கதறி அழுதார். பின்னர் இதுகுறித்து எலச்சிபாளையம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் போலீசார் விரைந்து வந்து இருவரது உடல்களையும் இறக்கி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் நடந்தால் நெருங்கி பழகிய தோழியை பிரிய நேரிடுமோ? என்று கருதி மணப்பெண் தோழியுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்