கொரோனா பரவலை தடுக்க எலெக்ட்ரானிக் முகக்கவசம் முன்னாள் ராணுவ அதிகாரி அசத்தல்

கொரோனா பரவலை தடுக்க எலெக்ட்ரானிக் முகக்கவசத்தை, முன்னாள் ராணுவ அதிகாரி உருவாக்கி உள்ளார்.

Update: 2020-05-21 00:44 GMT
குன்னூர்,

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெலிங்டன் ராணுவ முகாம் பகுதியில் வசித்து வருபவர் கர்னல் ராமகிருஷ்ணன். இவர் ராணுவத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி கனகலாதா, விஞ்ஞானி ஆவார். இவர்கள் இருவரும் இணைந்து கொரோனா பரவலை தடுக்க எலெக்ட்ரானிக் முகக்கவசத்தை உருவாக்கி உள்ளனர்.

இது ரெஸ்பிரேட்டருடன் கூடிய எலெக்ட்ரானிக் பில்டர்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த முகக்கவசத்தை விமானப்படை, ரெயில்வே போன்ற துறைகளில் உள்ளவர்கள் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

பதிவு செய்ய ஏற்பாடு

இது குறித்து கர்னல் ராமகிருஷ்ணன் கூறுகையில், இந்த முகக்கவசத்தை அணிபவர்களுக்கு ஆக்சிஜன் தடையின்றி கிடைக்கும். அதே சமயம் கொரோனா உள்ளிட்ட வைரஸ் கிருமிகள் உயர் மின் அழுத்தத்தில் அழிக்கப்படும் வகையில் இந்த எலெக்ட்ரானிக் முகக்கவசம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்கள் அருகில் இருந்தாலும், எலெக்ட்ரானிக் முகக்கவசத்தை பயன்படுத்தும்போது தொற்று வராமல் தடுக்க முடியும். முகக்கவசம் ஒன்று உருவாக்க ரூ.4 ஆயிரம் தேவைப்படுகிறது. அதிகளவில் உருவாக்கினால் விலை குறைய வாய்ப்பு உள்ளது. மேலும் இதனை மத்திய ஆயுஷ் அமைச்சகத்தில் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்று கூறினார்.

மேலும் செய்திகள்