தரங்கம்பாடியில் கடல் சீற்றம் படகுகள் அடித்து செல்லப்பட்டதால் பரபரப்பு

நாகை மாவட்டம் தரங்கம் பாடியில் கடல் சீற்றத்தால், ராட்சத அலைகள் தாக்கி புதிதாக கட்டப்பட்டு வந்த துறைமுகத்தில் அலை தடுப் பணை சேதமடைந்தது.

Update: 2020-05-22 00:30 GMT
பொறையாறு, 

நாகை மாவட்டம் தரங்கம் பாடியில் கடல் சீற்றத்தால், ராட்சத அலைகள் தாக்கி புதிதாக கட்டப்பட்டு வந்த துறைமுகத்தில் அலை தடுப் பணை சேதமடைந்தது. மேலும் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் அடித்து செல்லப்பட்டன.

கடல் சீற்றம்

வங்க கடலின் தென்பகுதியில் சமீபத்தில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயலாக மாறியது. ‘உம்பன்’ என பெயர் சூட்டப்பட்ட இந்த புயல் நேற்று முன்தினம் இரவு மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா பகுதிகளில் கரையை கடந்தது.

இதன் எதிரொலியாக நேற்று நாகை மாவட்டம், தரங்கம்பாடியில் கடல் சீற்றம் அதிகமாக காணப் பட்டது. இதனால் படகு நிறுத்தும் தளம், மீன்வலை கூடம் ஆகிய பகுதிகளில் கடல் நீர் புகுந்தது.

சேதம்

நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் ரூ.1 கோடியே 20 லட்சம் செலவில் மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணிகள் நடை பெற்று வந்தது. தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக அந்த பணிகள் நிறுத்தப்பட்டு உள்ளன. இந்தநிலையில் உம்பன் புயலால் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் புதிதாக கட்டப் பட்டு வந்த துறை முகத்திலும் கடல்நீர் புகுந்தது.

மேலும், துறைமுகத்தில் கடலில் கட்டப்பட்டு வந்த அலை தடுப்பணை சேத மடைந்து, கடலில் அடித்து செல்லப்பட்டது. இதேபோல் கடற்கரையோரம் மீனவர்கள் நிறுத்தி வைத்திருந்த பைபர் படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் சிறிது தூரம் அடித்து செல்லப்பட்டு, துறைமுகத்தை யொட்டி ஒதுங்கியது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

டேனிஷ் கோட்டை

கடல் சீற்றத்தின் போது எழும்பிய ராட்சத அலைகள் தரங்கம்பாடியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க டேனிஷ் கோட்டையை நெருங்கி சென்றது. இதனால் கரைப்பகுதியில் வசிக்கும் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். தகவல் அறிந்த பவுன்ராஜ் எம்.எல்.ஏ., தரங்கம்பாடி மீன்பிடித் துறைமுக பகுதிக்கு சென்று பார்வையிட்டார். அப்போது அவர் கூறுகையில், கடல் சீற்றமாக இருப்பதால் மீனவர்கள் பாதுகாப்பாக இருக்க கேட்டு கொண்டார். கடல் சீற்றத்தால் புதிதாக கட்டப்பட்டு வந்த மீன்பிடி துறைமுகத்தில் அலை தடுப்பணை சேதமடைந்தது குறித்து முதல்-அமைச்சர் மற்றும் மீன்வளத்துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் செய்திகள்