ஆரம்ப சுகாதார நிலைய கண்ணாடியை உடைத்த லாரி டிரைவர் கைது

கொங்கணாபுரம் அருகே ஆரம்ப சுகாதார நிலைய கண்ணாடியை உடைத்த லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2020-05-23 02:10 GMT
எடப்பாடி, 

 கொங்கணாபுரம் அருகே வெள்ளாளபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் சிவா (வயது 21). லாரி டிரைவர். இவருக்கும், அவரது தந்தைக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் அவருக்கு கையில் காயம் ஏற்பட்டது. 

அதற்கு சிகிச்சை பெற தனது நண்பர் முரளியுடன் வெள்ளாளபுரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றார். அங்கு இருந்த செவிலியர் செரின் அமலா ராணியிடம் காயத்துக்கு மருந்து போட கூறியுள்ளனர். அதற்கு அவர் பதிவு செய்த பிறகு தான் காயத்திற்கு மருந்து போட முடியும் என தெரிவித்துள்ளார். 

இதனால் ஆத்திரம் அடைந்த சிவா, அங்கிருந்த ஜன்னல் கண்ணாடி தடுப்பை உடைத்துள்ளார். மேலும் செவிலியரை தகாத வார்த்தையில் திட்டியதாக கூறப்படுகிறது. 

இது குறித்த புகாரின் பேரில் கொங்கணாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீராமன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவாவை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய முரளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்