வாழப்பாடி அருகே மின்னல் தாக்கியதில் மரம் தீப்பிடித்து எரிந்தது
சேலம் மாவட்டத்தில் நேற்று மாலை இடி-மின்னலுடன் மழை பெய்தது. அப்போது பலத்த காற்று வீசியது.
வாழப்பாடி,
வாழப்பாடி அருகே பொன்னாரம்பட்டியில் மின்னல் தாக்கியதில் சாலையோரத்தில் இருந்த 50 ஆண்டுகள் பழமையான புளியமரம் தீப்பிடித்து எரிந்தது. மேலும் மரத்திற்கு அடியில் கூலித்தொழிலாளர்கள் முடைந்து அடுக்கி வைத்திருந்த நூற்றுக்கணக்கான தென்னங்கீற்றுகளும் எரிந்து நாசமானது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் வாழப்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் மீனாட்சிசுந்தரம் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் குடியிருப்பு பகுதிக்குள் தீ பரவாமல் தடுக்கப்பட்டது.
வாழப்பாடி பருத்தி மண்டி அருகே சூறைக்காற்றில் புளியமரம் சாய்ந்தது. மன்நாயக்கன்பட்டியில் குடிசையில் மரம் விழுந்தது. இதில் பெருமாயி (வயது 65) என்ற மூதாட்டி பலத்த காயம் அடைந்தார். பின்னர் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.